Saturday 30 March 2013

நிக் டி அலிஸியோ: மிக இளைய வயது கோடீஸ்வரன் 2013


தகவல் தொழில்நுட்பத் துறையின் எழுச்சி மனிதனின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மிக இளைய வயதில் கோடீஸ்வரனாவதும் இதில் ஒன்று. facebook தளத்தின் மார்க் ஃஜூக்கர்பர்க் (Mark Zuggerburg) இந்தப் போக்கை தொடங்கி வைத்த நிலையில், இந்த வரிசையில் லண்டனை சேர்ந்த 17 வயது நிக் டி அலிஸியோ (Nick de Aloisio)-வும் இப்போது சேர்ந்துள்ளார். மிகக்குறைந்த வயதில் இவர் செய்த சாதனைகளையும் இதன் பின்னணிகளையும் காணலாம்.
கோடிகளில் சம்பாதிக்கும் பள்ளி மாணவன்:
லண்டனின் புறநகர் பகுதியான விம்பிள்டனில் வசிக்கும் சிறுவன் நிக் டி அலிஸியோ. ஸ்மார்ட் போன்களில் செய்திகளை எளிதாக படிப்பதற்காக இவர் உருவாக்கிய சம்லி அப்ளிகேஷன் என்ற மென்பொருள் பயன்பாடுதான் இவரை உலகளாவிய பிரபலமாக்கியுள்ளது. அதோடு பள்ளியில் படிக்கும் போதே கோடீஸ்வரன் என்ற
அந்தஸ்தையும் எட்ட உதவியுள்ளது. இந்த பயன்பாட்டு மென்பொருளுக்கு யாஹூ நிறுவனம் கொடுத்த தொகை மிகப்பெரியது என தெரியவந்துள்ளது. இத்தொகையின் மதிப்பு 150 கோடி ரூபாயாக இருக்கலாம் என தொழில்நுட்ப வலைப்பூ நிறுவனம் ஒன்று கணித்துள்ளது. தனக்கு கிடைத்துள்ள இந்த புகழால் திக்குமுக்காடிப் போயுள்ளார் நிக் டி அலிஸியோ.
நிக் டி அலாய்சியோ, அப்ளிகேஷனை உருவாக்கிய மாணவன்:
இப்படிப்பட்ட ஒரு நிலைக்கு வருவேன் என ஒருபோதும் நான் நினைத்ததில்லை. கடந்த நவம்பரில் எனது கண்டுபிடிப்பைக் களமிறக்கிய போது, இது பலருக்கும் பயன்படும் என்றுதான் நினைத்தேன். ஆனால் யாஹூ போன்ற பெரிய நிறுவனங்களே இதை வாங்க போட்டி போட்டது கண்டு பிரமித்துப் போய்விட்டேன்.
கண்டுபிடிப்புகளில் கலக்கும் மாணவன்:
சிறுவன் அலிஸியோ-வின் இந்தப் புதிய மென்பொருள் பயன்பாட்டை கடந்த 4 மாதங்களில் பல லட்சம் பேர் தங்கள் ஸ்மார்ட்ஃபோன் (smartphone)-களில் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பதே இதன் முக்கியத்துவத்தை விளக்கும். அலிஸியோ-வின் கண்டுபிடிப்பு இத்துடன் நின்றுவிடவில்லை. facebook பயன்படுத்துபவர்களின் மனநிலையை அறிய உதவும் ஃபேஸ்மூட் (facemood) என்ற மென்பொருள் பயன்பாட்டை 12 வயதிலேயே உருவாக்கியவர். இது தவிர மிக நீளமான கட்டுரைகளை 400 வார்த்தைகளுக்குள் தானாகவே சுருக்கும் ட்ரிமிட் (trimid) என்ற பெயரிலான மென்பொருள் பயன்பாடும் பிரமிக்கவைப்பதாக உள்ளது. அலிஸியோ-வின் இந்த கண்டுபிடிப்புகள் அவரது அறிவுக்கூர்மையையும் தொழில்நுட்பத்திறனையும் வெளிப்படுத்துவதுடன் நவீனகால சமூகத்தின் தேவைகளை அறியும் திறனையும் வெளிப்படுத்துவதாக உள்ளது என்கின்றனர் நிபுணர்கள். அலிஸியோ-வுக்கு இப்போது யாஹூவின் லண்டன் அலுவலகத்தில் வேலைசெய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
நிக் டி அலாய்சியோ, அப்ளிகேஷனை உருவாக்கிய மாணவன்:
எனக்கு கிடைத்துள்ள இவ்வளவு பெரிய தொகையை சட்டரீதியாக பயன்படுத்த எனக்கு வயது போதாது. எனவே இதைக்கொண்டு ஒரு நிதியை ஏற்படுத்தி அதில் போட்டு வைப்பேன். மேலும் யாஹுவில் வேலைசெய்ய இருப்பது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன் புதிய தலைவரான மாரிஸ்ஸா மேயரோடு வேலைசெய்யப் போவதை எண்ணி மிகவும் உற்சாகமாக உள்ளேன்.
தமிழகத்திலும் சாதனை மாணவர்கள்:
லண்டன் சிறுவன் அலிஸியோ-வைப் போல அறிவுக்கூர்மையும் தொழில்நுட்பத்திறனும் கொண்ட மாணவர்களும் இளைஞர்களும் நம் நாட்டிலும் நிச்சயம் இருப்பார்கள். அத்தகையோருக்கு அலிஸியோ குறித்த இந்தச் செய்தி சிறந்த தூண்டுகோலாக இருக்கும்.

No comments:

Post a Comment