Friday 10 May 2013

தாமஸ் ஆல்வா எடிசன் 100 முறை தோல்வி ஆனால் -true facts about Thomas Alva Edison

இந்த கட்டுரை...
பெற்றோர்கள் மற்றும் ,
ஆசிரியர்கள் மூலம் அவர்தம்
குழந்தைகளுக்கு சமர்ப்பணம் . .
. .

பிடிவாத குணம் இல்லாத குழந்தைகளே இல்லை எனலாம். குழந்தைகள் எதற்கெல்லாம் பிடிவாதம் செய்வர்? தங்களுக்குப் பிடித்த சாப்பிடும் பொருள்கள், விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் பிடிவாதம் செய்வர். அல்லது தாங்கள் விரும்பும் கடற்கரை, பொருட்காட்சி, மிருகக் காட்சிசாலை... போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லவில்லை எனில் பிடிவாதம் செய்வர்.

மேலும், தொடர்ந்து ஒவ்வொரு முறையும் பள்ளியில் விடுமுறை நாள்கள் வரும்போது அழைத்துப் போகச் சொல்லி விடாமுயற்சியுடன் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பர்.



குழந்தைகள் தங்களுடைய பிடிவாத குணத்தையும் விடாமுயற்சியையும் படிப்பிலும், பிற திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் காட்ட வேண்டும். இப்படி, பிடிவாத குணத்தினாலும் விடாமுயற்சியினாலும் இன்று உலகம் புகழும் அறிஞராக _ பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்பவரே தாமஸ் ஆல்வா எடிசன்.


எடிசன் ஓர் ஆய்வினைத் தொடங்கிவிட்டால், அதன் முடிவைக் கண்டறியும்வரை ஓய்வே எடுக்க மாட்டார். ஒரு நாள், எடிசனின் சோதனைச்சாலையில் அவரது உதவியாளர்கள் இசைத்தட்டு ஒன்றினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அன்று இரவுக்குள் இசைத்தட்டினை உருவாக்கிவிட வேண்டும் என உதவியாளர்களுக்கு எடிசன் கூறியிருந்தார்.

உதவியாளர்களுள் ஒருவர் கிராமபோன் இசைத்தட்டினைத் தயாரிப்பதற்காக மெழுகு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பலமுறை முயற்சி செய்தும் மெழுகினைப் பக்குவமான தேவையான பதத்தில் தயார் செய்ய அவரால் முடியவில்லை. எரிச்சலும் வெறுப்பும் அடைந்தார்.

எடிசனிடம் சென்று, பலமுறை முயன்றும் மெழுகு சரியான பதத்தில் வரவில்லை. நாம் செய்த செயல்முறையின் அடிப்படையில் ஏதோ ஓர் தவறு உள்ளது. ஆகையால், அதனை முதலில் சரிசெய்ய வேண்டும். இன்றைய ஆய்வினை இத்துடன் நிறுத்தி விடலாம். நாளை புதிதாக முயற்சி செய்யலாம் என்றார்.


எடிசன் கோபத்துடன், மெழுகு சரியான பதத்தில் வரவில்லையெனில், அதற்குரிய செய்முறையை மாற்றி திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். தாங்கள் சரியாகச் செய்யாமல் அடிப்படையில் தவறு என்று இன்னொன்றின் மீது குறையைச் சுமத்தக் கூடாது. திரும்பத் திரும்பச் செய்வதுதான் வெற்றிக்கு வழியே தவிர, பாதியில் விட்டுவிட்டு ஓடுவது வெற்றிக்கு வழிவகுக்காது என்றார்.

ஒரு முறை, விஞ்ஞானிகளுக்கு வேண்டிய தகுதிகள்பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எடிசன் என்ன பதில் கூறினார் தெரியுமா?

ஒரே நேரத்தில் நான் எந்த விசயத்தையும் கண்டுபிடித்ததில்லை. பல காலம் இடைவிடாமல் தொடர்ந்து செய்த முயற்சிகளின் விளைவுதான் என் வெற்றிகள். இதில் அதிர்ஷ்டம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. விஞ்ஞானிகளில் சிலர் ஓரிரு சோதனைகளைச் செய்து பார்த்துவிட்டு நிறுத்திவிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, நான் விரும்பியதை அடையும்-வரை நான் மேற்கொண்ட சோதனையை இடையில் நிறுத்தியதே இல்லை.


100 முறை தோல்வியடைந்த ஒருவர் 101 ஆவது முறை வெற்றியடைந்துவிட முடியும் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை. எனக்கு அபாரமான அறிவும் ஆற்றலும் இருப்பதால்தான் நான் வெற்றி பெறுவதாகச் சிலர் சொல்கிறார்கள். அது என் நண்பர்கள் கூறும் புகழ்ச்சி உரையே தவிர அதில் உண்மையில்லை.

விடா முயற்சியுடன் தொடர்ந்து பாடுபடுபவர்-களும் என்னைவிடச் சிறப்பான வெற்றிகளைப் பெற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.


எல்லாப் பாடங்களையும் விரும்பிப் படிக்கும் குழந்தைகள் மிகச் சிலரே, குறிப்பிட்ட ஒரு பாடத்தைப் படிக்கச் சிரமப்படும் குழந்தைகள் திரும்பத் திரும்பப் படித்து, அதனைப் புரிந்து மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். மனதில் பதிய வைத்த பாடங்களைப் பிழையின்றி எழுதுகின்ற பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படிப் பயிற்சி செய்வதை விட்டுவிட்டு, எனக்கு அறிவியல் என்றால் அலர்ஜி; கணக்கு என்றால் கசப்பு என்று கூறக் கூடாது.

எல்லோரும் எல்லாம் தெரிந்து கொண்டு பிறப்பதில்லை. நமது அறிவைப் பயன்படுத்தி, நாம்தான் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளால் பகுத்தறிந்து சிந்தித்துச் செயல்பட்டு வெற்றிகளைக் குவிக்க வேண்டும்.


அமெரிக்காவில் பிறந்து அகிலப் புகழ் பெற்ற விஞ்ஞானி எடிசன் மின்விளக்கு, கிராமபோன், ஒலிபெருக்கி, திரைப்படம் போன்றவற்றை-யெல்லாம் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். எனவே, பள்ளியில் சென்று படிக்காதவர். வீட்டில் தன் தாயிடமே அரைகுறையாகக் கல்வி பயின்றவர். இருப்பினும், எடிசன் தன் ஆய்வுகளைத் திரும்பத் திரும்ப விடாமுயற்சியுடன் செய்து பல வெற்றிகள்  பெற்றுள்ளார். 

வீட்டில் தன் தாயிடம் அரைகுறையாகக் கல்வி கற்ற எடிசனே இவ்வளவு சாதனைகளைப் புரிந்துள்ளார் என்றால், பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களின்,பெற்றோர்களின் அரவணைப்பில் மற்றும்  அன்பில் முறைப்படி பாடங்களை முழுமையாகப் பயிலும் நமது குழந்தைகள் இது போல பல சாதனைகளை நிகழ்த்தினால் வீட்டுக்கும்..நமது நாட்டுக்கும் பெருமைதானே ?

No comments:

Post a Comment