Saturday 20 July 2013

தமிழகம் முழுவதும் 421 மையங்கள்: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இன்று நடக்கிறது 2,881 காலி இடங்களுக்கு 1½ லட்சம் பேர் போட்டி

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 421 மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 2,881 காலி இடங்களுக்கு 1½ லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
2,881 காலி இடங்கள்
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு–1) பதவிகளுக்கான போட்டித்தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தமிழகம் முழுவதும் 421 மையங்களில் 1½ லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு கண்காணிப்பு பணியில் 8,383 மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.சென்னையில் வேப்பேரி சி.எஸ்.ஐ. பெய்ன் மேல்நிலைப்பள்ளி, சி.ஐ.டி. நகர் ஆல்பா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, அண்ணா நகர் சி.எஸ்.ஐ. ஜெசி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்பட 55 இடங்களில் தேர்வு நடக்கிறது. இந்த மையங்களில் 13,927 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

பார்வை இல்லாதோருக்கு கூடுதல் நேரம்
தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை 3 மணி நேரம் நடைபெறும். தேர்வு தொடங்குவதற்கு அரை மணிநேரத்திற்கு முன்பாக தேர்வு அறைக்கு செல்லுமாறு தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வைத்திறன் இல்லாதோருக்கு தேர்வு மையத்தின் தரைத்தளத்திலேயே அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், பார்வைத்திறன் இல்லாதோருக்கு தேர்வு எழுத கூடுதலாக அரைமணி நேரம் வழங்கப்படும். அவர்களுக்கு உதவியாளர்களும் நியமிக்கப்படுவார்கள்.தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் ஜி.அறிவொளி தெரிவித்தார்.

No comments:

Post a Comment