Saturday 20 July 2013

கத்தியின்றி ரத்தமின்றி நடந்த புரட்சி - Rattaminri kattiyinri the Revolution

நீண்ட காலமாகப் பதவியில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழும் சம்பவங்கள் வரலாற்றில் பல முறை நிகழ்ந்திருக்கிறது. பல போராட்டங்கள் வன்முறைகளாக மாறி ஆயிரக்கணக்கானோரின் உயிரைக் குடித்திருக்கின்றன.
இவற்றுக்கு மாறாக கத்தியின்றி ரத்தமின்றி நடந்த ஒரு புரட்சியை பற்றித் தெரியுமா உங்களுக்கு?
ரோஜா புரட்சி. ரோஜா மலர் உற்பத்தியைப் குறிப்பதல்ல.
முன்னாள் சோவியத் நாடான ஜார்ஜியாவில் நடந்த ஆட்சி மாற்றத்துக்கு காரணமான எழுச்சிதான் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.
எஜுவர்ட் ஷெவர்ட்னேட்ஸ் அந்நாட்டு அதிபராக இருந்தபோது சிட்டிசன்ஸ் யூனியன் ஆப் ஜியார்ஜியா என்ற கட்சியே ஆண்டு வந்தது. ஆனால் அரசின் மீதான மக்களின் அவநம்பிக்கை, செயலற்ற தன்மை என அதிருப்தி பெருகி வரவே 2000மாவது ஆண்டு ஆளும் கட்சியிலிருந்து பலர் பிரிந்து சென்று வெவ்வேறு புதிய கட்சிகளை துவக்கினர்.
வர்த்தக துறையினர் நியூ ரைட்ஸ் கட்சியையும், நீதி துறை அமைச்சராக இருந்த மைகேல் ஷாக்ஸ்வில்லி ,தேசிய இயக்கம் என்ற எதிர்க்கட்சியையும் உருவாக்கினர். இதன் காரணமாக ஆளுங்கட்சி சிதறுண்டு போனது.
இதன் பிறகு 2003ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து எதிர்க்கட்சிகள் கடுமையான போராட்டத்தைத் தொடங்கின.
தலைநகர் ட்பிலிசியில் நடந்த எதிர்ப்பு போராட்டங்களில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர்.
உள்நாட்டு போருக்கான அச்சம் எழவே ராணுவ படைகள் குவிக்கப்பட்டன. ஆனால் எவ்வித வன்முறையிலும் போராட்டக்காரர்கள் ஈடுபடாததால், ராணுவ படைகள் தாமாகவே பின் வாங்கியது.
ரஷ்யா, அமெரிக்கா ஆகிய உலகின் இருபெரும் துருவங்களும் இந்த நாட்டு விவகாரத்தில் தலையிடுவதற்கும் இந்தப் புரட்சி காரணமாக அமைந்தது.
இறுதியில் அதிகாரமற்ற நிலைக்கு தள்ளப்பட்ட எஜுவர்ட் ஷெவர்ட்னேட்ஸின் 30 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.
ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது, மாணவர்கள் ரோஜா பூக்களை வழங்கியதாலும், முக்கிய எதிர்க்கட்சி தலைவரான மைகேல் ஷாக்ஸ்வில்லி நாடாளுமன்றத்திற்குள்ளே ரோஜா பூவுடன் சென்று அதிபரை பதவி விலகுமாறு கோரியதும்தான் இந்த புரட்சிக்கு ரோஜா புரட்சி என்ற பெயரை பெற்றுத் தந்தது.
இப்படி எதிர்ப்பு வலுக்கவே அதிபர் எஜுவர்ட் ஷெவர்ட்னேட்ஸ் பதவியை ராஜினாமா செய்தார்.
முக்கிய அரசியல் முகங்கள் வெளியேறியதால் ஆளும் கட்சி நலிந்துபோனது.
இதன் தாக்கம் 2002ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சுயேட்சைகள் மற்றும் புதிய கட்சிகள் கண்ட அபார வெற்றியின் மூலம் நன்றாக வெளிப்பட்டது.
இந்நிலையை மாற்ற சிட்டிசன் யூனியன் ஆப் ஜியார்ஜியா கட்சிக்கு புதிய கூட்டணிகளை தேடினார், எஜுவர்ட் ஷெவர்ட்னேட்ஸ்.
ஆனால் உட்கட்சிப் பூசலகள், சரியான மாற்றுத் தலைவர்களுக்கு பஞ்சம் உள்ளிட்ட காரணங்களால் அவரது எண்ணம் ஈடேறவில்லை.
இந்த காலக்கட்டத்தில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சி 4000 வரை எட்டியது.
இந்த ரோஜா புரட்சியில் அரசுக்கு எதிராக மக்களை திரட்டிய பங்கு அதிகம் முக்கியத்துவம் பெற்றது. தொண்டு நிறுவனங்கள் உருவாக எளிமையான சட்டங்களை எஜுவர்ட் ஷெவர்ட்னேட்ஸ் அனுமதித்திருந்தார்.
பின்னாளில் அதுவே அவரது அரசியல் கனவுகளை தகர்க்க காரணமாய் அமைந்தது.
அந்நாட்டில் அப்போது நிலவிய வலுவற்ற பொருளாதார நிலையும், தொண்டு நிறுவனங்களுக்கு அதிகரித்த வெளிநாட்டு நிதியுதவியும் இந்த புரட்சிக்கு கைகொடுத்தன.
இந்த ரோஜா புரட்சியானது பின்னாளில் நடந்த ஜியார்ஜியா (ஆரஞ்ச் புரட்சி) மற்றும் கிரிகிஸ்தான் (துலிப் புரட்சி) போராட்டங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment